இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் 2019 ஆண்டு வாக்கில் 4ஜி சேவைகளை வெளியிட திட்டமிட்டது. எனினும், உள்நாட்டு நிறுவனங்கள் வழங்கும் உபகரணங்களை கொண்டு தான் 4ஜி சேவைகளை வெளியிட வேண்டும் என அரசு அறிவித்தது. இதை அடுத்து தான் இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு தாமதமானது. மேலும் 4ஜி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் அறிக்கையை பிஎஸ்என்எல் வெளியிட்டது.
இந்த கோரிக்கைக்கு டிசிஎஸ் நிறுவனம் மட்டுமே பதில் அளித்தது. இதை அடுத்து பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான சோதனைகள் துவங்கின. அந்த வகையில், பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இணைந்து நாடு முழுக்க 4ஜி சேவையை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்காக இரு நிறுவனங்கள் இடையே ரூ. 16 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளன. இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சலுகைகளை வழங்குவது மற்றும் விலை நிர்ணயம் பற்றி இரு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.