திருகோணமலை 22 ஆவது இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று(21.10.2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவானின் கட்டளை
காலி- வதுரப கல்தெனியாய அக்கர 06 இல் வசித்து வரும் பிரதிபா றுவன் குமார (21வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லுமாறும் பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் கட்டளையிட்டுள்ளார்.
காதல் விவகாரமாக இருக்கலாம்
தூக்கில் தொங்கியமைக்கான காரணம் காதல் விவகாரமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று சட்ட வைத்திய அதிகாரி குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.