உள்ளூர் பால் தொழிலை மேம்படுத்த இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிப்பதற்காக இந்தியாவின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் சார்ந்திருப்பதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்தக்குழு, இலங்கையின் பொது மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ளது.
பூர்வாங்க கலந்துரையாடல்
இந்தக்குழு, திட்டத்தை தயாரிப்பதற்காக இந்திய தேசிய கால்நடை மேம்பாட்டு சபையுடன் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இலங்கையில் திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு, இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையும், இந்திய அமுல் பால் நிறுவனமும் செயற்படவுள்ளன.
இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் திரு சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி நிமல் சமரநாயக்க, உட்பட்ட இலங்கை குழுவினரும்,இந்திய தேசிய கால்நடை மேம்பாட்டு சபையின் மூத்த பொது மேலாளர் ராஜேஷ் ஓங்கர்நாத் குப்தா உட்படட இந்திய குழுவினரும் இதில் பங்கேற்றனர்.