தொப்பை வரும் போது உடல் பருமனும், இடுப்பு அளவும் கூடுகிறது. ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’. இது 19-க்கு கீழிருந்தால் உடல் எடை குறைவு. 19-24-க்குள் இருந்தால் சரியான உடல் எடை. 24-30 க்குள் இருந்தால் அதிக உடல் எடை. 30-க்கும் மேலிருந்தால் அது உடல் பருமனை குறிக்கும்.
சராசரியாக ஆண்கள் 21 -25, பெண்கள் 18 – 23 அளவில் இருக்கலாம். தொப்பை இருக்கிறதா என்பதை இடுப்பின் அளவை வைத்து அறியலாம். இடுப்பின் அளவு அதிகமாக இருப்பது நம் ஆயுளின் அளவைக் குறைக்கும் என்பது ஒரு பொது நியதி. ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ (37 அங்குலம்), பெண்ணாக இருந்தால் இடுப்பின் அளவு 80 செ.மீ (32 அங்குலம்) இருக்கலாம். இதற்கு அதிகமாக இருப்பது அதிகரித்த உடல் பருமனைக் குறிக்கும். சித்த மருத்துவத்தில்
1) நத்தைச் சூரி விதைப்பொடியை காப்பி போல இருவேளை காய்ச்சி குடிக்கலாம்.
2) குங்கிலியப் பற்ப மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிடலாம். உணவுகள்: சிறிதளவு கொள்ளு (கருப்பு, சிவப்பு, வெள்ளை ஏதாவது ஒன்று) எடுத்து அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம்.
இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு (பூண்டை சிதைத்து வெண்ணிற துணியில் வைத்து நெருப்பில் வாட்டி எடுத்து பிழிய சாறு வரும்), எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவை அனைத்தும் 2.5 மில்லி வீதம் எடுத்து 5 மில்லி தேன் கலந்து காலை, இரவு சாப்பிட கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும். (நீரிழிவு நோயாளிகள் தேனை தவிர்க்கவும்) எலுமிச்சம் பழச்சாறு, தேன் இவற்றை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.