வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் தனித்தனியே போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழுக் கூட்டம், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கேற்றிருந்தனர்.
புளொட்டின் சார்பில் ராகவன் பங்கேற்றிருந்தார். அதேசமயம் சுகயீனம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் பங்கேற்கவில்லை.
ரெலோவின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
தனிவழி செல்வதற்கு இணக்கம்
இதன்போது உள்ளாட்சிமன்ற தேர்தல், அரசாங்கத்துடனான பேச்சு உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. இதில் உள்ளாட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கும், ஏனைய பங்காளிகள் தனிவழி செல்வதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
எனினும் புளொட், ரெலோ என்பன இணைந்து போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
மேலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு, கைப்பற்றிய சபைகளில் ஆட்சி அமைப்பதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதக்க கூறப்படுகின்றது