மகா சிவராத்திரிக்கு அடுத்த முக்கிய தினமாக வருகிறது மாசி மகம். பௌர்ணமி திதியுடன் இணைந்து வரும் மகம் நட்சத்திர தினத்தையே ‘மாசி மகம்’ என அழைக்கிறோம்.
7 ஜென்ம பாவங்களை கூட போக்கும்
இன்றைய தினம் கடல், குளம், ஆறு ஆகியவற்றில் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை கலந்திருக்கும் என்பது காலங்காலமாக வரும் நம்பப்பட்டு வரும் ஐதீகம். அப்படி மாசி மகம் வரும்போது புனித நீராடுவது நம்முடைய 7 ஜென்ம பாவங்களை கூட நீக்குமாம்.
மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் 7 ஜென்ம தோஷங்கள் நீங்கி சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். இந்த தினத்தில் பல கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் தீர்த்தவாரி நடைபெறும்.
அன்னதானம் செய்தால், கோடி புண்ணியம்
புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி.
அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், இயன்ற வரை அன்னதானம் செய்தால், கோடி புண்ணியம் வந்து சேரும் நலமுடன் வாழலாம்.
பார்வதி தேவி, தக்கனின் மகளாக அவதரித்த தினம் மாசிமகம் என புராணம் கூறுகின்றன. சிவனின் சக்தியான தேவியே, தன் மகளாக வந்து பிறக்க தக்கனிடம் பேராவலும் ஆசையும் இருந்தது. சிவனிடம் மனமுருகி தவம் இருந்தான்.
அதன் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக பிறந்தாள். அவர்களுக்கு ‘தாட்சாயிணி’ என பெயர் வைத்து பாசம் வைத்து வளர்த்தார் தக்கன். பின்னர் சிவபெருமானுக்கே தன் மகளை மணமுடித்து வைத்தார்.
இப்படி உமா தேவி அவதரித்த தினம் மாசி மகம் என்பதால் புனிதமாக கருதப்படுகிறது.