வவுனியா செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்த மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் காணாமல் போன நிலையில் புதன்கிழமை அநுராதபுரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.
செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் மாணவர்கள் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை பழுதடைந்த துவிச்சக்கர வண்டிக்கு டயர் வேண்டுவதற்காக சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் விடுதி திரும்பவில்லை.
பொலிஸில் முறைப்பாடு
இதனையடுத்து இரவு எட்டு மணியளவில் குறித்த விடுதியின் காப்பாளர் காணாமல் போன மாணவனின் (மன்னார் முத்தரிப்புத்துறை) பெற்றோருக்கு தொடர்பு எடுத்து மகன் வீட்டுக்கு வந்தாரா என்று கேட்டுள்ளனர்.
பதறியடித்த பெற்றோர்கள் ஏதேனும் பிரச்சினையா என்று கேட்ட போது விடுதி காப்பாளர்களால் மாணவர்கள் காணாமல்போனமை தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்கள் காணாமல்போனமை தொடர்பில் விடுதி பங்குத் தந்தையர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களிலும் மாணவர்களின் புகைப்படங்களும் பகிரப்பட்டன.
இந்நிலையில், இரண்டு நாட்களின் பின்னர் புதன்கிழமை இவ் இரு பாடசாலை மாணவர்களும் அநுராதபுரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவர்களை யாரேனும் கடத்திச்சென்றார்களா அல்லது அவர்களாகவே சென்றனரா போன்ற விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.