மட்டக்களப்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (15) கல்லடி பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தைச் சோந்த ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்தமைக்கான வரி தொடர்பாக 2 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக குறித்த அதிகாரி கோரியுள்ளார்.
இதனையடுத்து காணி கொள்வனவு செய்தவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்றைய தினம் பகல் கல்லடியிலுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களப் பகுதியில் மாறு வேடத்தில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது காரியாலயத்துக்கு வெளியில் வைத்து அதிகாரி 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டபோது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரத்தைச் சோந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.



















