சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 01.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபர், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 47,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 235 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 05 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.