கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புறாக்கள், ஆபிரிக்க லவ்பேர்ட்ஸ்கள் (AFRICAN LOVE BIRDS), பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) மற்றும் மருந்து தொகைகளுடன் பயணித்த லொறி ஒன்றுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய வடமத்திய கடற்படை கட்டளை தலைமையகத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் பேசாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் பயணித்த லொறி ஒன்று சோதனையிடப்பட்டது.
லொறியில் 220 புறாக்கள், 20 ஆபிரிக்க லவ்பேர்ட்ஸ்கள், 8 பறக்கும் அணில்கள் மற்றும் 30 மருந்து மாத்திரைகள், மருந்து திரவங்கள் அடங்கிய 40 போத்தல்கள், லொறி மற்றும் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புள்ளை மற்றும் கொழும்பில் வசிக்கும் 25 மற்றும் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட விலங்குகள், லொறி மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



















