சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது நாட்டின் கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர் ராஜா குரூஸ், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் செயலாளர் மொஹமட் ஆலம், வட மாகாண கடற்றொழில் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோர், அமைச்சரை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் திங்கட் கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழக மீனவர்களின் அத்துமீறலால் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீன்பிடி சட்டம் வரைபு திருத்தம், உள்ளூர் மீன்பிடியில் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி நடவடிக்கை என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவை மடி மீன்பிடியை வெளிப்படுத்திடும் ஆவணப்படம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஆவண படமொன்றை தயாரித்துள்ளனர். அதனை எனக்குக் காண்பித்தனர்.
அதேபோல இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைப்பிடிக்கின்றனர். எனவே, இவற்றைத் தடுத்து நிறுத்தி எமது நாட்டின் கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும்.
அதேபோல் கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஆழ்கடல் மீன்பிடிக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அவை ஊடாக ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிக்கப்படும் என்றார்.