இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (17) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால்,கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடல் எல்லையைத் தாண்டி உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலை தடுத்து, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு யாழ்.மயிலடி கடல்வள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.