மட்டக்களப்பு (Batticaloa) வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமப் பகுதியில் புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (14) அதிகாலை 1மணிக்கு இடம்பெற்றுள்ளதோடு, சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய இராசதுரை சசிகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு முன்பகுதியிலிருந்து நண்பர்களுடன் புத்தாண்டினை வரவேற்கும் வகையில் பேசிக்கொண்டிருந்தவர் சத்தம் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தபோது யானையின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தவரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வேளை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவருட தினத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதன் காரணமாக அப்பகுதி சோகமயமான நிலையில் உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.