‘இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது. அவ்வாறு அத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படும்’ என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
இந்திய மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தயவு செய்து எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என இந்திய மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல தடைசெய்யப்பட்ட ரோலர் படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை. இனியும் அந்த விளையாட்டு வேண்டாம்.
எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம். வந்தால் கைது செய்யப்படுவீர்கள். உடமைகள் பறிமுதல் செய்யப்படும்.
124 இற்கு மேற்பட்ட இழுவைப்படகுகள் மயிலிட்டியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



















