வெளிநாட்டு மோகத்தில் வடபகுதி இளைஞர்கள் , யுவதிகள், குறிப்பாக யாழ்ப்பாணத்து பிள்ளைகள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
UK, France போன்ற நாடுகளுக்கு தாம் இலவசமாக அனுப்புவதாகவும், அங்கு சென்ற பின்னர் பணம் கொடுத்தால் போதும் என்றும் ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரின் ஆசை வார்த்தையில் மயங்கி பலர் ஏமாந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் பல முகவர்களை வைத்து அவர்களின் வங்கி இலக்கங்களுக்கு குறித்த நபர் பணம் வைப்பிலிட கூறிய குறுஞ்செய்திகளும் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில், அவர்களால் பரப்படும் விளம்பரங்களை நம்பி தமிழ் இளைஞர், யுவதிகள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறித்த மோசடியாளர்கள் , வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொழும்பில் இயங்கும் ஓர் அலுவலகம் ஊடாக இந்தியா விசாக்களை பெற்று அங்கு அனுப்பி வைப்பதுடன், பணத்தையும் மோசடியாக பெற்று வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
UK, France செல்லாது இடைநடுவில் அதாவது இலகுவாக விசா பெற்று செல்லக்கூடிய நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைப்பதுடன் அவர்களிடம் பணத்தையும் இலங்கையில் உள்ல வங்கிகளுக்கு அனுப்புமாறு அனுப்பும் குறுஞ்செய்திகளும் பாதிக்கப்பட்டவர்களால் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதேவேளை இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




















