ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகை டிம்பிள் ஹயாதி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்த நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த 22 வயதான வீட்டுப் பணிப்பெண், நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் விக்டர் டேவிட் ஆகியோர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில், ஹயாதி மற்றும் அவரது கணவர் தன்னை துன்புறுத்தியதாகவும், இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனக்குப் போதுமான உணவு வழங்கப்படவில்லை என்றும், அடிக்கடி வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் அவமானகரமான வார்த்தைகளுக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நடிகையும் டேவிட்டும் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், தனது பெற்றோரைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் அந்த முறைப்பாட்டில் கூறப்படுகிறது.
அந்தத் தருணத்தைத் தனது கைத்தொலைபேசியில் பதிவுசெய்ய முயன்றபோது, டேவிட் தனது தொலைபேசியைப் பிடுங்கி, தரையில் அடித்து நொறுக்கி, தன்னைத் தாக்க முயன்றதாக பணிப்பெண் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் இருதரப்பினருக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
நடிகை டிம்பிள் ஹயாதி, 2023 இல் ஐபிஎஸ் அதிகாரியின் ஒருவரின் காரைச் சேதப்படுத்திய வழக்கிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.




















