தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் நீரேந்து பகுதிகளில் இருந்து வரும் மேலதிக நீர்வரத்து காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, திருகோணமலை மாவட்டத்தின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் மீண்டும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.
குறிப்பாக, வெண்டராசன் குளம் மற்றும் கந்தளாய் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், வெளியேறும் மேலதிக நீர் மகாவலி கங்கையில் கலந்து ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் அபாய நிலையை உருவாக்கியுள்ளது.”
விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
“கிண்ணியா பிரதேசத்தில் மட்டும் கடந்த நவம்பர் மாத வெள்ளத்தினால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் அழிவடைந்தன. கடந்த வாரம் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மீண்டும் விதைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இருப்பினும், தற்போதைய இரண்டாவது கட்ட வெள்ளப்பெருக்கு மீண்டும் அந்த வயல் நிலங்களை மூழ்கடித்துள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு இந்த வெள்ள அபாயம் நீடிக்கலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஆற்றுப் படுகைகளை அண்மித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயற்கை அனர்த்தம் புரட்டிப் போட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.






















