கதம்ப சட்னியில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சத்து நிறைந்தவை. காலையில் இட்லி, தோசையில் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சட்னி.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 4 பற்கள்
காய்ந்த மிளகாய் -5
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புளி – 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சிகப்பு மிளகாயை போட்டு வறுத்த பின்னர் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் இறக்கி ஆற வைக்கவும்.
அனைத்து நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான கதம்ப சட்னி ரெடி.