இந்திய மாநிலம் கேரளாவில் தொழிலாளி ஒருவர் லொட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் பாதுகாப்பு கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று உதவியை நாடியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் 34 வயதான தஜ்முல்ஹக். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து கட்டிடத்தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் அங்கேயே தங்கி விட்டார். அவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசின் காருண்யா பாக்கியஸ்ரீயின் ரூ.1 கோடி லொட்டரிச் சீட்டை வாங்கியுள்ளார்.
தற்போது அவர் வாங்கிய லொட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்துள்ளது.
இதையறிந்த தஜ்முல்ஹக், பெருமகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி தனது லொட்டரிச்சீட்டை யாரும் பறித்து விடக்கூடாது என அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று உதவியை நாடியுள்ளார்.
பணியில் இருந்த பொலிசாரும் லொட்டரிச்சீட்டை வாங்கி பார்த்து அந்த சீட்டுக்கு ரூ.1 கோடிகிடைத்து இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து பொலிசார் அவரை உரிய வங்கிக்கு அழைத்துச் சென்று லொட்டரிச்சீட்டில் கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய தஜ்முல்ஹக், பிழைப்புக்காக இதுவரை நானும், எனது குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்டோம்.
இனி லொட்டரிச்சீட்டில் கிடைத்த பணத்தை கொண்டு வாழ்க்கையை மேம்படுத்த ஆவன செய்வோம் என்றார்.