மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னா பின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முசலியில் இன்று சனிக்கிழமை (01) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
களமிறக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என துல்லியமாக தெரிந்த போதும், இந்தக் களப்பரீட்சையில் அவர்கள் இறக்கப்டுவதன் காரணம், சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி எவ்வாறாவது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டால், தாங்கள் விரும்பியபடி அரசாங்கத்தை கொண்டு செல்லலாம் என்பதற்கேயாகும்.
யுத்த முடிவின் பின்னர், நாம் இங்கு வந்த போது, கிராமங்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருந்தன.
மக்களை மீளக்குடியேற்றுவதிலும் கட்டடங்களை மீளஅமைப்பதிலும் நாம் சவால்களை எதிர்கொண்டோம்.
நான்காம் கட்டையிலிருந்து அரிப்பு மற்றும் மறிச்சுக்கட்டி வரையிலான, பொலிவிழந்து கிடந்த அத்தனை கிராமங்களையும் முடிந்தளவு மீளக்கட்டியெழுப்பினோம்.
அன்றாட வாழ்வுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்ற மனநிறைவு எமக்கு இருக்கின்றது.
தற்போது தேர்தல் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரதேசத்துக்கு தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.
தாங்கள் வெற்றிபெறப் போவதில்லை என தெளிவாகத் தெரிந்திருந்தும், வன்னி மாவட்டத்தில் எம்.பியாக இருக்கும் என்னை இல்லாமலாக்குவதே அவர்களின் பிரதான இலக்கு என்றார்.