யாழ். மாவட்டத்தில் குடித்தொகை வளர்ச்சி வீதம் மிகவும் குறைந்து கொண்டு செல்கிறது. நாங்கள் கல்வி கற்கும் காலகட்டத்தில் 800, ஆயிரமாகவிருந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 20, 25 ஆக வெகுவாக குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக யாழில் பல ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலைமை மாற்றம் பெற வேண்டும். எமது குடித் தொகை வளர்ச்சி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியில் அகில இலங்கை சைவமகாசபையின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற ‘அன்பே சிவம் விருது வழங்கலும் சஞ்சிகை வெளியீடும்’ நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருவர் பெரு அறிஞராக, விற்பன்னராக விளங்கிய போதும் அவர் உயர்ந்த பண்புகளைக் கொண்டிருப்பதுடன், ஏனையோருடன் எவ்வாறு பழகுகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு தான் அவர் மதிக்கப்படுவார்.
அந்த வகையில் இன்று அகில இலங்கை சைவமகாசபையால் கெளரவிக்கப்படும் மகப்பேற்று மருத்துவர் வைத்திய கலாநிதி சரவணபவா மிகவும் எளிமையும், அன்பும், பண்பும் கொண்டதொரு சிறந்த மருத்துவர்.
அவரொரு மகப்பேற்று மருத்துவ நிபுணராகவிருந்து எளிமையாக ஏனையவர்களுடன் பழகுகின்ற தன்மையும், மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் செய்கின்ற பணிகளும் மெச்சுதற்குரியது. இதனால் தான் எத்தனையோ தாய்மார்கள் மகப்பேற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காகத் தூரவிடங்களிலிருந்து கூட அவரை நாடிச் செல்கின்றனர்.
பண ஆசை பிடித்த ஒருவராகவிருந்திருந்தால் பல நாட்களுக்கு முன்னரே அவரால் பணக்காரனாக ஆகியிருக்க முடியும்.
ஆனால், மக்கள் சேவை ஒன்றே நோக்காக கொண்டு வைத்திய கலாநிதி சரவணபவா சிறப்பான மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
இவ்வாறான சிறந்ததொரு மருத்துவ சேவையாளன் எமது மாவட்டத்திற்கு கிடைத்திருப்பது மிகப் பெரு வரம் எனவும் அவர் மேலும் புகழாரம் சூட்டியுள்ளார்.