நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், இரு குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்புள்ளது
நாட்டை அதிர வைத்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே இரண்டு முறை தூக்கு தண்டனை திகதி அறிவிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு அளித்ததால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிக்கொண்டே போனது.
இந்நிலையில், தற்போது மார்ச் 3ஆம் திகதி காலை 6மணிக்குள் நிர்பயா குற்றவாளிகள் 4பேரை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முறையாவது கண்டிபாக குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் கூறுகையில், “இன்னும் நிறைய சட்டத்தீர்வுகள் நிலுவையில் உள்ளன. நாங்கள் எங்கள் சட்ட தீர்வுகளின் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முறையிடுவோம்” எனத் தெரிவித்தார்.
இந்த தீர்ப்புக்கு ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தமே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தண்டனை திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 4 குற்றவாளிகளும் தப்பிக்க கூடிய வழிகள் குறித்து பார்க்கலாம்.
முதல் குற்றவாளி வினய் சர்மா: அவரது தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு, மறுசீராய்வு மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டு விட்டன. அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரித்தது தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனால், அவருக்கு இருந்த நான்கு வாய்ப்புகளும் முடிந்துவிட்டனர்.
இரண்டாவது குற்றவாளி முகேஷ் சிங்: இவரது சீராய்வு மனு, மறுசீராய்வு மனு, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து கருணை மனு தொடர்பான மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால், முகேஷ் சிங்கிற்கும் இருந்த வாய்ப்பும் முடிந்துவிட்டது.
குற்றவாளி அக்ஷய் தாக்கூர்: தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு, மறுசீராய்வு மனு, குடியரசு தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணைமனு ஆகியவை நிராகரிக்கப்பட்டுவிட்டன. குடியரசுத் தலைவர் குருணை மனுவை நிராகரித்தது தொடர்பான மேல்முறையீடு செய்யும் ஒரு வாய்ப்பு மட்டும் அக்ஷய் தாக்கூருக்கு இருக்கிறது.
குற்றவாளி பவன் குப்தா: இவருக்கு மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன. தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு மட்டுமே அவருக்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மறு சீராய்வு மறு, குடியரசுத் தலைவரிடம் குருணை மறு அளிக்கும் வாய்ப்பு, கருணை மனு நிராகரிகப்பட்டால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பு ஆகியவை பவன் கும்தாவுக்கு இருக்கிறது.