கடவத்தையில் காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் பன்னல, வேரஹேர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3 பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் பல இடங்களில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஆனால் அப்போது சடலம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



















