இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின் மத சுதந்திரம் பெருவாரியாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது மத சுதந்திரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 24ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு முதல் முறையாக விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த விஜயம் தொடர்பில் பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்புகள் வலுப்பெற்று வருகின்றன.
அத்துடன் இதன்போது எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்படும் என்பது குறித்தும் பலர் தமது கருத்துக்களையும், கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.
இதேவேளை இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின், மத சுதந்திரம் பெருவாரியாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலும் சில கேள்விகள் எழுந்துள்ளன.
இவ்வாறான நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி தெரிவித்த கருத்தை இந்திய ஊடகமொன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதில், நம்முடைய பாரம்பரிய ஜனநாயகத்தின் மதிப்புகள் மற்றும் மதச் சுதந்திரம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகவும், பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையிலும் சந்திக்கும்போது பேசுவார்.
இந்த விஷயங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் மதச் சுதந்திர பிரச்சினை குறித்தும் பேசுவார்.
இந்தியாவின் பாரம்பரிய ஜனநாயக மதிப்புகள், அமைப்புகள் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. இந்தப் பாரம்பரியங்களை இந்தியா தொடர்ந்து பின்பற்ற நாங்கள் ஊக்கப்படுத்துவோம்.
உலக அளவில் இந்தியா எவ்வாறு பாரம்பரிய மதிப்புகளைப் பின்பற்றி வருகிறது, சிறுபான்மை மத சுதந்திரத்தின் மீது எவ்வாறு மதிப்பளிக்கிறது என்பதை உன்னிப்பாகப் பார்த்து வருகின்றனர்.
உண்மையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் மதச் சுதந்திரம், சிறுபான்மை மதத்தினருக்கு மதிப்பளித்தல், அனைத்து மதங்களையும் சமமாக மதித்தல் போன்றவை இருக்கிறது. ஆதலால், இதுபோன்ற விஷயங்களை நிச்சயம் டொனால்ட் ட்ரம்ப் விவாதிப்பார் என நினைக்கிறேன்.
இந்தியா என்பது வலிமையான ஜனநாயக அமைப்பைக் கொண்ட நாடு. இங்கு மதம், மொழி, மற்றும் பன்முகக் கலாச்சாரம் போன்ற உயர்ந்த விஷயங்களைக் கொண்டுள்ளது.
பல்வேறு மதங்கள் உதயமானது இந்தியாவில்தான் என்பதை மறுக்க முடியாது பிரதமர் மோடி தேர்தலில் வென்றவுடன் தனது முதல் பேச்சில், சிறுபான்மையினர் அடங்கிய இந்தியாவுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பேன் எனப் பேசினார்.
ஆதலால், இந்தியாவில் எவ்வாறு சிறுபான்மையினருக்கு மத சுதந்திரத்தை எவ்வாறு பராமரிக்கிறது, அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கிறதா என்பதை உலகம் உற்றுநோக்கும் என அந்த அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதன் முறையாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், மோடிக்கு அவர் வழங்கவுள்ள இந்த அழுத்தம் சிக்கலை ஏற்படுத்துமா என அரசியல் அவதானிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.



















