கொரோனா வைரஸ் தொற்றை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் எளிய பரிசோதனை முறை ஒன்றை பிரித்தானிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானியாவின் Newcastleஇலுள்ள Northumbria பல்கலைக்கழகத்திலுள்ள கல்வியாளர்கள் இந்த பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
வழக்கமான வாகன சோதனைகளின்போது, சாரதி மது அருந்தியிருக்கிறாரா என்பதைக் கண்டறிவதற்காக breathalyser என்னும் கருவியை பயன்படுத்துகிறார்கள்.
அந்த கருவியிலுள்ள ஒரு பகுதியில் ஊதினாலே அந்த நபர் மது அருந்தியிருக்கிறாரா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
தற்போது அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள நவீன கருவி இதுபோன்றதுதான். இந்த கருவியில் ஊதும்போது அந்த நபரின் நுரையீரலையும் தாண்டி அவரது உடலில் நோய்க்கிருமியின் DNA மற்றும் புரோட்டீன் முதலான விடயங்கள் அவரது மூச்சுக்காற்றில் கலந்துள்ளனவா என்பதை உடனடியாக இந்த கருவி கண்டுபிடித்துவிடும்.
தற்போது ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு, அவரது வாய்க்குள்ளிருந்து எடுக்கப்படும் மாதிரி ஒன்று ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதற்கு 24 முதம் 48 மணி நேரம் வரை ஆகும். அதேபோல, தற்போது விமான நிலையங்கள் முதலான இடங்களில் உடல் வெப்பநிலையை வைத்து ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என சோதிக்கிறார்கள்.
ஆனால், இந்த முறை போதுமானதல்ல என்ற கருத்தும் ஒரு பக்கம் நிலவி வருகிறது.
ஆகவே, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய முறையின் மூலம் விமான நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் அல்லது ஆம்புலன்ஸ்களிலேயே மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை சோதித்து உடனடியாக சோதனையின் முடிவுகளையும் கண்டுபிடித்துவிடமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.