தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பிடாரப்பட்டி பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 23). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நத்தம் அருகேயுள்ள கம்பிளிப்பட்டி பகுதியில் இருக்கும் தனது அண்ணனான ஜெயராஜ் (வயது 35) என்பவரின் இல்லத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில், ஜெயராஜின் மனைவியான சின்னம்மாளுடன் ஏற்பட்ட பழக்கமானது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜெயராஜ் தனது மனைவி மற்றும் தம்பியை அழைத்து கண்டித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட கோபத்தில் சின்னம்மாள் ஆத்திரமடைந்து பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். தனது தம்பியின் காரணமாக மனைவி கோபமடைந்து சென்றதை உணர்ந்த ஜெயராஜ், தனது தம்பியிடம் சென்று தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறு இவர்களுக்குள் வாக்குவாதமாக அதிகரித்து கைகலப்பாக மாறவே, ஜெயராஜ் தனது தம்பியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். பழனிச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பழனிசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை தேடி வந்த நிலையில், அவரே வடமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.