முதலை கடித்து, உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்னது.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை மைலந்தனை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் சிறுவனை முதலை கடித்து இழுத்து சென்றதாக இவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்.
புனாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (15) எனும் சிறுவனே இவ்வாறு முதலைக்கு இரையாகி, மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
சம்பவம் குறித்த, மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.