தமிழகத்தில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் சிறுமி சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு தக்க சமயத்தில் உதவிய காவல்துறை கண்காணிப்பாளரை பலரும் பாராட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் உள்ளது. இங்கு ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அவருக்கு இரத்தப்புற்று பாதிப்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
பின்னர் மாதந்தோறும் சிறுமிக்கு பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
தந்தையை இழந்த அந்த சிறுமி ஏப்ரல் மாதத்துக்கான சிகிச்சைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால் வாகனங்கள் இல்லாத நிலையில், தனியாக வாகனத்தை வாடகைக்கு அமர்த்திச் செல்வதிலும் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது.
இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாரின் மக்கள் உதவித் திட்ட சிறப்பு கைபேசி எண்ணுக்கு சிறுமி சார்பில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
சிறுமி நிலை அறிந்த காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தினமும் ராமநாதபுரத்திலிருந்து தபால் கொண்டு செல்லும் காவல்துறை வாகனத்தில் சிறுமியையும், அவருடன் வருவோரையும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். அதனடிப்படையில் சிறுமி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
செய்வதறியாது தவித்த சிறுமிக்கு தக்க சமயத்தில் பெரிய உதவி செய்த காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை பலரும் பாராட்டியுள்ளனர்.