தமிழகத்தில் அரசு மருத்துவமனையில், 8 மாத கர்ப்பிணி, மூச்சுத் திணறலால் உயிரிழந்த நிலையில் அது தொடர்பிலான பின்னணி தகவல்கள் வெளிவந்துள்ளது.
சேலம் மாவட்டம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.
இவர் மனைவி தேவி (29). இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையில் தேவி கருவுற்றார்.
தற்போது, 8 மாத கர்ப்பிணியான தேவிக்கு, காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்தது. நேற்று முன்தினம் இரவ 10 மணிக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின் செயற்கை கருத்தரித்தல் செய்து கொண்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கிளம்பினர்.
பெரம்பலுார் அருகே வந்தபோது, மூச்சுத் திணறல் அதிகமாகவே நள்ளிரவு 12 மணிக்கு, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதிகாலை, 1:10 மணிக்கு, தேவி உயிரிழந்தார்.காய்ச்சல், சளி தொந்தரவுடன், மூச்சு திணறலும் இருந்ததால், அவரது ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
தேவியின் உறவினர்கள் கூறுகையில், தேவியின் மரண செய்தி அதிர்ச்சியளிக்கிறது, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட போது, திருச்சி, செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக கூறி விட்டனர்.
கொரோனாவை காரணம் காட்டி, அங்கு சிகிச்சைக்கு வர வேண்டாம் என தெரிவித்ததால், தேவியின் இறப்புக்கு, அந்த மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என கூறியுள்ளனர்.