கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்து ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் யாழ்ப்பணத்தில் இருந்து பொது போக்குவரத்து சேவைகள் நாளை (26) தொடக்கம் ஆரம்பமாக உள்ளதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சுகாதார முறைகளை பின்பற்றி பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பான மாவட்ட செயலகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலக பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய பொது மக்களுக்கான போக்குவரத்து சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் குறிப்பாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஏற்கனவே வடக்கு மாகணத்திற்குள் பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த சேவையில் அதிகளவில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளே ஈடுபடுகின்றன. தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுகின்றது. ஏனெனில் தனியார் பேருந்தினர் அரசிடம் முன்வைத்த கட்டண உயர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலும் இலங்கை போக்குவரத்து சேவையின் பேருந்துகளே அதிகளவில் ஈடுபடவுள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்து சேவைகளை தொழில் நிமித்தம் செல்பவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவையுடையவர்கள் பயன்படுத்துங்கள். போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றது என்பதற்காக ஏராளமானவர்கள் ஒன்று கூடுவது நல்லதல்ல. போக்குவரத்தில் பயணிப்பவர்கள் தனிநபர் சுகாதாரத்தை பேணுவது முக்கியமாகும். அத்தியாவசிய தேவை உடையவர்கள் மட்டும் பேருந்து சேவையை பயன்படுத்தும் பட்சத்தில் சன நெருக்கடியையும் வாகன நெரிசல்களையும் தவிர்க்க முடியும்.
மேலும் போக்குவரத்து சேவைகளில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் நாம் போக்குவரத்து தொடர்பில் இருந்து கட்டுப்பாடுகளை தளர்த்த ஆலோசித்து வருகின்றோம். அதன் அடிப்படையில் மிக விரைவில் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களுக்கான பாஸ் நடைமுறையை நிறுத்தவுள்ளோம் என்றார்.