தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் என்பவர் உணவில் விஷம் கலந்து தனது மகள்களுக்கும் கொடுத்து தானும் அருந்திய அதிர்ச்சி சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கதிரவன் கீற்று ஏற்றிச் செல்லும் வேனில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். 7 வருடங்களுக்கு முன் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு வருனிகாஸ்ரீ, ஜனனிகாஸ்ரீ, என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கதிரவன் மற்றும் சுகன்யா ஆகியோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து தனது இரண்டு மகள்களையும் கணவருடன் விட்டு விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் சுகன்யா. மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர முயற்சித்த கதிரவனின் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. இதற்கிடையில், ஊரடங்கின் காரணமாக கதிரவனின் தொழிலும் குறைய வருமானம் முடங்கிப் போனது.
இதனால் தனது மகள்களுடன் கஷ்டப்பட்டு வந்த நிலையில், கதிரவன் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து சம்பவ தினத்தன்று கடையில் இருந்து உணவு வாங்கி வந்த கதிரவன், அதில் விஷம் கலந்து தனது மகள்களுக்கும் கொடுத்து தானும் அருந்தியுள்ளார். அதன் பின்னர் மயங்கிய நிலையில் இருந்த மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரது இரண்டு மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். கதிரவனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிட்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.