விமானநிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்தவர் அமெரிக்க இராஜதந்திரி இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் விமல்வீரவன்ச,இதன்மூலம் அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது எனவும் சாடியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்த இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள-அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த அந்த அதிகாரி இராஜதந்திரி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் அமெரிக்காவின் இந்தோ பசுபிக்கிற்கான கட்டளை தலைமையகத்தினை சேர்ந்தவர்.
இந்த தருணத்தில் அந்த நபர் வியன்னா பிரகடனத்தை தவறாக பயன்படுத்தி இலங்கைக்கு ஏன் வந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குறிப்பிட்ட நபர் பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்தமை பாரதூரமான விடயம் என தெரிவித்துள்ள அமைச்சர் இது இடம்பெற அனுமதித்ததன் மூலம் அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது எனவும்தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் இலங்கையின் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அதிகாரியின் வருகைக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் இதனை தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


















