வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும். கண்டி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மூடுபனி நிலை
சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



















