கொவிட்-19 நிதியத்திற்காக பிரதமருக்கு ஐயாயிரம் ரூபாவை அனுப்பி வைத்த முதியவருக்கு, ஜனாதிபதியிடம் அந்த நிதியை கையளிக்கும் வாய்ப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயதான முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி.ஹேவாஹெட்ட அண்மையில் அலரி மாளிகைக்கு ஐயாயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதமொன்றை அனுப்பிவைத்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் குறித்த பணமும் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பணத்தை ஹேவாஹெட்ட நேற்று முற்பகல் தமது கைகளினாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
ஒரு மூத்த குடிமகனாக சமூக பொறுப்பை ஏற்று குறித்த பணத்தை அனுப்பிவைத்த திரு. ஹேவாஹெட்டவின் தாராள மனப்பான்மையை கௌரவிக்க வேண்டுமென கருதிய பிரதமர் ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளான நேற்று மிரிசவெட்டிய புனித பூமியில் இடம்பெற்ற தானம் வழங்கும் நிகழ்வின்போது, குறித்த நிதியை கொவிட்-19 நிதியத்திற்காக அந்த முதியவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை இதன்போது ஹேவாஹெட்ட குடும்பத்தாரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.