எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – செல்வாநகர் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது. எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம். நாளாந்தம் புதிய புதிய காவலரண்கள் வருகின்றன.
இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம்.
முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணூவ பிரசன்னத்திற்குள் வாழுகின்ற சூழலுல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது.
இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம்.
அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும்.
இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கும், ஒட்டுக்குழுக்கழுக்கும் வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம்.
நாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறைமைகளை மீட்டு எடுத்து நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது.
நான் கூட இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன். என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன்.
எங்கள் உரிமைகள் பற்றி பேசாமல் அல்லது எங்கள் உரிமைகளை விற்றுவிட்டு நாங்கள் அபிவிருத்தி பற்றி பேசவில்லை.
அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் பல்வேறுபட்டவர்கள் பல்வேறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் காலமும் வரலாறுமே அதனை தீர்மானிக்க வேண்டும்.
எங்களை பொறுத்தவரை பல்வேறு சிதைவுகளும், பல்வேறு வீச்சு எல்லைகளும் காணப்பட்டாலும் அவற்றை எல்லாம் கடந்து பயணிக்கின்றோம் என்றால் அது உங்களுடைய பலம் மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என மேலும் கூறியுள்ளார்.



















