கொரோனா வைரஸ் உலகமெங்கும் அச்சுறுத்திகொண்டிருக்கும் நேரத்தில், இதை வைத்து பல கடைகள் கொரோனா என்ற வார்த்தையை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுப்பட்டுகொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, கோவையில் உள்ள சின்னியம்பாளையத்திலும் வெள்ளலூரிலும் கொரோனா கொல்லி மைசூர்பா’ என்ற பெயரில் சுவீட்டை விற்பனை செய்யப்படுவதாக, கடை முகவரியுடன் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.
இந்த நிலையில் அந்த ஸ்ரீராம் லாலா கடையில் இன்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு, எந்த அனுமதியும் பெறாமல் அவர்கள் இந்த விளம்பரத்தை அச்சடித்து வியாபாரம் செய்தது தெரிய வந்தது.
கொரோனா கொல்லி மைசூர்பா, மூலிகை மைசூர்பா என்று வெவ்வேறு பெயர்களில் கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். மேலும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தகத்தை, திரிபலா, மஞ்சள் தூள், முருங்கையிலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை என சுமார் 19 வகை மூலிகைகளை அதில் கலந்துள்ளனர்.
இதையடுத்து சுமார் 120 கிலோ மைசூர்பாவை கைப்பற்றி அதை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடை உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



















