தீவிரவாதம் மற்றும் இனவெறியை பரப்புவதற்கு பதிலாக அனைத்து சமூகங்களும் சகோதரத்துவத்தின் மூலம் ஒன்றுபட வேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அனைத்து மக்களும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி வாழ்வதற்கு ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.
எல்லோரும் இனவெறி அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் சென்று அதற்கு பதிலாக ஒரு தேசியவாத அரசியல் சித்தாந்தத்தில் செயற்பட வேண்டும்.
ஆனால் ஒருசிலர், அரசாங்கத்தைப் பற்றி பல்வேறு தவறான கருத்துக்களைப் பரப்புவதன் ஊடாக மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். எனினும் அவைகள் அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்படுகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முழு அரசாங்கமும் எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி அனைத்து சமூக மக்களும் கண்ணியத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்க முயற்சித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















