நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்சார கோளாரை தொடர்ந்து இன்றும் ஸ்ரீலங்காவில் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின்நிலையத்தில் நேற்று உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் தேசிய மின்சுற்றோட்ட கட்டமைப்புடன் இணைக்கப்படாததால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்நிலையத்தில் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் சில பிரதேசங்களில் திடீர் மின்தடை ஏற்படக்கூடும் என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், செயலிழந்துள்ள நுரைச்சோலை மின்நிலையத்தை இயங்க வைப்பதற்கு சில நாட்கள் தேவைப்படும் என மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.




















