நல்லூர் உற்சவத்தின் தீர்த்த திருவிழாவான இன்று (18) தங்கச் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மனைவி யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
உற்சவத்தில் நல்லூர் கந்தன் தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடி கொண்டிருந்த போது, மூதாட்டியொருவரின் அருகில் சிறிய குழந்தையொன்றுடன் நின்ற இளம் தாயொருவர் சங்கிலியை அறுத்ததாக மூதாட்டி கூக்குரலிட்டார். அங்கிருந்தவர்களால் இளம்தாய் பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் கையளிக்கப்பட்டார்.
அவர் பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, சங்கிலி திருடியதை மறுத்தார். சிறிது நேர இழுபறியின் பின்னர் பெண் பொலிசார் அங்கு வந்து, அவரை மேலதிக விசாரணைக்கு அழைத்து சென்ற போது, பெண் சில அடிகள் எடுத்து வைத்தபோது அவரது சேலைக்குள்ளிருந்து சங்கிலி கீழே விழுந்துள்ளது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது கணவரும் சங்கிலியறுத்தபோது சிக்கினார்.
மேலும் குறித்த கணவன் மனைவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து திருடர்கள் குழுவாக இவர்கள் நல்லூரில் களமிறங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து தங்கச் சங்கிலியை மீட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




















