நாட்டை அபிவிருத்தி செய்வதை விட தமது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அந்த பலத்தை மாத்திரம் தேடிச் சென்றதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச வருமானம் மூன்றில் இரண்டு வீதம் குறைந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வித பொருளாதார பார்வைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு இறுதி நான்கு மாதங்களுக்கான புதிய அரசாங்கத்தின் செலவுகளுக்காக தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் அரச செலவுகளுக்காக ஆயிரத்து 700 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த செலவை ஈடு செய்ய அரசிடம் போதுமான நிதியில்லை. இதன் காரணமாக ஆயிரத்து 300 பில்லியன் ரூபாயை கடனாக பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார நெருக்கடியை நன்றாக வெளிப்படுத்துகிறது.
பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போத்தல்களுக்கு பதிலாக களிமண் பாத்திரங்களில் தண்ணீரை பருகுமாறும், வாரம் ஒரு முறை அரச ஊழியர்கள் பத்திக் அணிய வேண்டும் என கோருவதன் மூலமும் முழு பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியாது. 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 1.6 என்ற வீதத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.


















