உலக முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் அதனால் அவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தெரிவித்தனர்.
ஆனால், ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எனவே கொரோனா வைரஸிலிருந்து குணமானவர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில். இந்தியாவில் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 27 வயது கொண்ட இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஜூலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் சமீபத்தில் குணமாகி வீடு திரும்பினார்.
தற்போது அவருக்கு மீண்டும் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அவருக்கு மீண்டும் கொரோனா வைரசின் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்றும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.




















