தற்போது மக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் பலமுறை கசாயங்களைத் தயாரித்துக் குடித்து வருகிறார்கள்.
ஆனால் அளவுக்கு அதிகமாக கசாயம் குடிப்பது நல்லதல்ல என்றும், அது பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் பலமுறை கசாயத்தைக் குடிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
- நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் பட்டை, சீந்தில் கொடி, மிளகு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது அல்சர், வயிற்று வலி அல்லது நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும்.
- அதோடு இது கல்லீரலையும் சேதப்படுத்தும்.
- குறிப்பாக ஒருவர் அதிகப்படியான மசாலாப் பொருட்களை எடுத்தால், அது கடுமையான வயிற்று வலி, அசிடிட்டி போன்றவற்றை உண்டாக்குவதாகவும், அதிகளவு சீந்தில் கொடியை பயன்படுத்தினால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று குறைத்துவிடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
- தற்போதைய பெருந்தொற்று காலத்தில் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரை அடிக்கடி சந்திக்க முடியாத காரணத்தினால், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பலர் சீந்தில் கொடியைப் பயன்படுத்துகிறார்கள். இதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையில் தள்ளப்படுகின்றனர்.
- கர்ப்பிணிகள் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதற்காக கண்ட கசாயத்தைக் குடித்தால், அது கருக்கலைப்பைக் கூட ஏற்படுத்தும்.
- மேலும் வைட்டமின் சி-யை அதிகமாக உட்கொள்வது வாந்தி, வயிற்று பிரச்சனைகள் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
- ஒரு நாளைக்கு 8 கிராமிற்கும் அதிகமாக மஞ்சளை எடுத்தால், அதனால் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
- ஒரு நாளைக்கு 1 கிராம் வைட்டமின் சி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆனால் அதுவே அதிகமானால், அது சிறுநீரகங்களை சேதப்படுத்துவதோடு, சிறுநீரக கற்களையும் உண்டாக்கும்.
எவ்வளவு கசாயம் குடிக்கலாம்?
ஆயுஷ் அமைச்சகத்தின் படி, ஒரு நாளைக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருவர் 2 கப் மட்டும் கசாயத்தை குடிக்க வேண்டும்.
அதுவும் பால் கலந்த டீயைக் குடிக்கும் நேரத்தில், அதற்கு பதிலாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாயத்தைக் குடிக்க ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கிறது.
இவ்வாறு குடிப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் பருமன் குறைந்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.