திருமணக் கோலத்தில் கையில் துடுப்பு மட்டையுடன் போஸ் கொடுத்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கணை சஞ்சிதாவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அவருக்கு ஐ.சி.சியும் பாராட்டு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம் (24). நடுவரிசை துடுப்பாட்டக்காரரான இவர்எ16 ஒருநாள் போட்டிகள் (174 ரன்), 54 ரி 20 போட்டிகளில் (520 ரன்) பங்கேற்றுள்ளார். சமீபத்தில் முதல் தர கிரிக்கெட் வீரரான மிம் மொசாதிக்கை மணந்தார்.
அதை தொடர்ந்து, திருமண போட்டோ ஷூட்டில் கற்பனையை தட்டி விட்டார் சஞ்சிதா. பாரம்பரிய பட்டு உடை, உடல் முழுவதும் தங்க நகை அலங்காரத்துடன் மணக்கோலத்தில் மைதானத்தில் களமிறங்கினார்.
தனது முதல் காதல் கிரிக்கெட் தான் என்பதை உணர்த்தும் விதமாக, கையில் துடுப்பு மட்டையுடன் போஸ் கொடுத்தார். கவர் டிரைவ், புல் ஷொட் அடிக்கும் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகின.
இவரது புது முயற்சிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) தன் பங்கிற்கு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பாரம்பரிய உடை, நகை உடன் கையில் மட்டை உள்ளது. கிரிக்கெட் நட்சத்திரங்களின் போட்டோ ஷூட் இப்படி தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.