ஒரேநாளில் கிழக்கு மாகாணத்தில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருடாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பேலியகொட மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்குகிடைத்த தகவலின்படி சந்தேகத்தில்பேரில் பலரை தேடிப்பிடித்து பிசிஆர் தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது இந்த 27பேர் தொற்றுக்குள்ளானது நிருபிக்கப்பட்டுள்ளது.
கல்முனைப்பிராந்தியத்தில் கல்முனைக்குடியில் 3பேரும் நிந்தவூரில் 1பெண்மணியும் பொத்துவிலில் 5பேருமாக 9பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் வாழைச்சேனை கோறளைப்பற்றில் 11பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியவில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணியின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.
இன்னும் பலர் சமுகத்துள் மறைந்துவாழ்ந்துவருகின்றனர். எனவே பொதுமக்கள் இதுவிடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அலட்சியமாகவிருந்தால் கிழக்கில் கொரோனாவைக்கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.
சுகாதாரத்துறை மட்டும் இதுவிடயத்தில் கவனமெடுத்தால் போதும் என்று எண்ணவேண்டாம். எனவே தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.