ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.
இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவிருந்த போதிலும் கொவிட் – 19 தொற்று பாதுகாப்பு நடைமுறையினைக் கருத்திற்கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது 199 பேருக்கான நியமனங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவாறாக ஐந்து பேர் வீதம் உள்வாங்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிசாரின் பாதுகாப்பு அலுவலகத்தைச் சுற்றி அதிகரித்து காணப்பட்டது. நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட நியமனதாரிகளும் அவர்களது பெற்றோரும் குறித்த நியமனம் கிடைத்தமையினையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தனர்.


















