கொழும்பு பேலியகொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த நபர் ஒருவர் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை கைது செய்யப்பட்டார்
அவர் தற்போது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நபர் கொழும்பு பேலியகொட மீன் சந்தை பகுதியில் வேலை செய்து வந்து நிலையில் இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நபர் அங்கு இருந்து தப்பி வந்து மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் தங்கி இருந்தார்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக அவர் சுகாதார அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டார். அவர் கந்தக்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளார்.
குறித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி அறியும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மேலும் தெரிவித்தார்.


















