மாவனல்லை பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் கலந்துகொண்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்ரமசிங்க உறுதி செய்துள்ளார்.
மாவனல்லையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பங்கு கொண்ட நபர்களிடையே, 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அதில் மணமக்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 120 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மணமகன் கொழும்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் பணி புரிபவர் எனவும் குறித்த திருமண வைபவத்திற்கு கொழும்பில் இருந்தும் சிலர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திருமணம் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்தபோதிலும், 2ம் நாள் மணமகனின் வீட்டில் நடந்த வைபவத்தில் இவை கடைபிடிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட மணப்பெண் உந்துகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மணமகன் கேகாலை மாவட்ட தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கேகாலை மாவட்டத்தில் இதுவரையில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.