நாட்டில் டெங்கு மற்றும் கொரோனா இரண்டும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலையில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு டெங்கு நிலையத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு நோய் தொற்றுக்குள்ளானர் 29 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மீன் சந்தை ஒன்றிம் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
“நோயாளி அதிக காய்ச்சலுடன் வந்தார், நாங்கள் அவரை ஆன்டிஜென் பரிசோதனையின் மூலமாகவும், கொரோனா தொற்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவும் சோதனை செய்தோம்.
மூன்றாம் நாளில் டெங்கு சோதனை சாதகமாக வந்தாலும், பி.சி.ஆர் சோதனை முடிவுகள் ஐந்து நாட்கள் கழித்தே வந்தது என வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நோயாளி டெங்கு தொடர்பாக மருத்துவ ரீதியாக நிலையானவராக இருப்பதால், அவர் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 13415 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று மட்டும் 445 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் இதுவரையில் 7723 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். அத்துடன் 34 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.