சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு சர்யா பல்கலைக்கழகத்திற்கான காணி யாரால் வழங்கப்பட்டது என்பதையும் அது யாரால் அனுமதிக்கப்பட்டது என்பதையும் மகாவலி அபிவிருத்திச் சபையின் காணி சம்பந்தமான பணிப்பாளர் நாயகம் அசங்க உதயகுமார அம்பலப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும், அப்போதைய மகாவலி அமைச்சினை வகித்திருந்தவருமான மைத்திரிபால சிறிசேனவே இதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்களை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி சாட்சியமளித்தபோது அவர் வெளியிட்டுள்ளார்.
தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஆரம்பிக்கவென மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் 2012ஆம் ஆண்டு மார்ச் 05ஆம் திகதி மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கோரியிருக்கின்றார்.
சவூதி அரேபியாவின் தொழிற்பயிற்சி நிறுவனமொன்றின் உதவியுடன் இந்த நிலையத்தை ஆரம்பிக்க 35 ஏக்கர் தேவைப்படுவதையும் ஹிஸ்புல்லா தனது கோரிக்கையில் இணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்தற்கான பணிப்புரை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவிடமிருந்து கிடைத்ததாகவும், இதற்கமைய 35 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டதுடன் பணிப்பாளர் குழாமும் இதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாகவும் காணி பணிப்பாளர் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
மேலும் இந்தக் காணியை அனுமதிப்பதற்கான ஆவணத்திலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கையெழுத்திட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.