தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவர் மனைவி ஆறுமுகம். தம்பதிக்கு சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23) என்ற மகள்களும் இசக்கி தாஸ் (21) என்ற மகனும் இருந்தனர்.
இதில் விஜயலட்சுமிக்கு வருகிற 10-ந் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டியும், அவரது மனைவியும் எழுந்து கடைக்கு சென்று விட்டனர்.
பின்னர் சந்தன செல்வி எழுந்து சமையலறை அருகே வந்தார். அங்கு கூரையின் மேல் விட்டத்தில் தனது தங்கை விஜயலட்சுமி கழுத்தில் சேலையால் தூக்கில் தொங்கியதை கண்டு அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை அறிந்த பெற்றோரும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், விஜயலட்சுமி தனது குடும்பத்தாரிடம் எனக்கு காது சரிவர கேட்காது, இந்த பிரச்சினை இருப்பதால் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாகவும் தெரிகிறது.
ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். திருமண வேலைகள் நடந்து வந்த நிலையில் விஜயலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


















